முன்னாள் துணை முதல்வர் மணீஸ் சிசோடியாவுக்கு காவல்
By: Nagaraj Sat, 11 Mar 2023 6:57:25 PM
புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த மாதம் 26ம் தேதி கைது செய்தது.
இதனிடையே, பணப் பரிமாற்ற முறைகேடு தொடர்பாக திகார் சிறையில் உள்ள சிசோடியாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சிசோடியா டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோஹப் உசேன் கூறியதாவது: மதுக்கடை உரிமம் வழங்கியதில், மணீஷ் சிசோடியா, அவரது உதவியாளர் விஜய் நாயர், தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா ஆகியோர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.292 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கவிதாவுடன் இணைந்த தென்மண்டல குழுமம் சார்பில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. சிசோடியாவின் பிரதிநிதியாக விஜய் நாயர் கவிதாவை சந்தித்துள்ளார்.
கடந்த ஓராண்டில் சிசோடியா பயன்படுத்திய 14 மொபைல் போன்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த மொபைல் போன்களும், அதில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகளும் சிசோடியா பெயரில் இல்லை. அவர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். அவரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். இதை அமலாக்கத் துறையின் வழக்கறிஞர் ஜோஹாப் ஹுசைன் வாதிட்டார்.