- வீடு›
- செய்திகள்›
- மாற்றுத்திறனாளிகளுக்கு 31-ந் தேதிவரை அரசு பணிகளை மேற்கொள்ள விலக்கு; தமிழக அரசு உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு 31-ந் தேதிவரை அரசு பணிகளை மேற்கொள்ள விலக்கு; தமிழக அரசு உத்தரவு
By: Monisha Thu, 13 Aug 2020 10:04:56 AM
அலுவலகப் பணிகளை மேற்கொள்வதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு 31-ந் தேதிவரை விலக்கு அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா தொற்று தடுப்பு தொடர்பான தமிழக அரசின் அத்தியாவசிய பணிகளில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பணியாற்ற வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார்.
அதை ஏற்று, பல்வேறு துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாடு மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த ஜூலை 31-ந் தேதிவரை, அலுவலகத்தில் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், இம்மாதம் 31-ந் தேதிவரை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்காது என்பதால், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களின் உடல்நிலை குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இம்மாதம் 31-ந் தேதிவரை மாநிலம் முழுவதிலும் அரசு அலுவலகப் பணிகளை மேற்கொள்வதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளித்து ஆணையிடும்படி அரசிடம் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்று, அவர்களுக்கு 31-ந் தேதிவரை அரசு அலுவலகப் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளித்து அரசு ஆணை பிறப்பிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.