மே மாதத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை
By: Nagaraj Mon, 17 Apr 2023 10:15:57 PM
புதுடில்லி: நிபுணர்கள் எச்சரிக்கை... கொரோனா பரவல் மே மாதத்தில் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா மீண்டும் நாடு முழுவதும் பரவி வருகிறது. எக் ஸ்பி பி 1.16 எனும் புதிய வகை கொரோனா பரவல் அதன் உச்சத்தை எப்பொழுது தொடும் என சில மருத்துவ நிபுணர்களும், அது ஏற்கனவே உச்சத்தை தொட்டுவிட்டது என சிலரும் வெவ்வேறு கருத்துகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9111 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, இதில் 27 பேர் உயிர் இழந்தனர், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது. இதுவரை மொத்தமாக 4 கோடியே 42 லட்சத்து 35 ஆயிரத்து 772 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் 5 லட்சத்து 31 ஆயிரத்து 141 ஆக உள்ள நிலையில், தற்பொழுது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 60,313 ஆக உயர்ந்துள்ளது. தொற்று அதிகரித்த மாநிலங்கள் கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக தொற்று பதிவாகியுள்ளது. இதில் கேரளா மாநிலத்தில் அதிகளவாக 19,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதிப்பு 500-ஐ கடந்து வருவது குறிப்பிடத்தக்கது.