மதுரைப் பகுதியில் முழு ஊரடங்கு வரும் 14ம் தேதி நீட்டிப்பு
By: Nagaraj Sun, 12 July 2020 8:13:56 PM
மதுரைப்பகுதியில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு... கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஜூலை 14 வரை முழு ஊரடங்கினை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த காரணத்தால், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூலை 12ம் தேதி நள்ளிரவு வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இந்த முழு ஊரடங்கின் காரணமாக மதுரை மாவட்டத்தில் நோய்த் தொற்றை
கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடுதோறும் நடைபெற்று வரும்
ஆய்வு ஆகியவை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில்
மேற்கண்ட பகுதிகளில், முழு ஊரடங்கினை மேலும் 2 நாட்கள் நீட்டித்தால், நோய்
தொற்று உள்ளவர்களை அனைவரையும் கண்டறிந்து, கட்டுப்படுத்த ஏதுவாக இருக்கும்
என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேற்குறிப்பிட்ட பகுதிகளில்
ஜூலை 14ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
எனவே, அமலில் உள்ள கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அதுவரையில் தொடரும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.