பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
By: vaithegi Thu, 03 Nov 2022 6:27:12 PM
இந்தியா: கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு ..... இந்தியாவில் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சோ்ந்தவர்கள் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இனத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பாக கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2022 – 2023ம் கல்வியாண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் அக்.31ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அக்.31 நிறைவடைந்த நிலையில் விண்ணப்பபதிவிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இது பற்றி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தற்போது பள்ளி மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவ. 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நவ.30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் விண்ணப்பிப்பது குறித்த தகவல்களுக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.