மணலியில் உள்ள அமோனியம் நைட்ரேட்டை வாங்க வெளிமாநில நிறுவனம் விருப்பம்
By: Nagaraj Sun, 09 Aug 2020 10:11:03 AM
மணலியில் உள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை, வெளி மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வாங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணலியில் உள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை, வெடிமருந்துகளை சேமித்து வைக்கும் கிடங்கில் பாதுகாப்பாக வைக்க சுங்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னையில் 740 டன் எடை அளவுள்ள அமோனியம் நைட்ரேட் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் இருந்து இந்த அமோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்தது. இந்நிலையில் உரிய அனுமதியின்றி இது இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு மணலியில் உள்ள சரக்குப் பெட்டக முனையத்தில் 37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்தக் கிடங்குக்கு அருகில் 12
ஆயிரம் பேர் வசிப்பதாகவும் எனவே, அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள
கன்டெய்னர்களை 3 நாட்களுக்குள் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும்
தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கன்டெய்னர்களை வெடிமருந்துகள்
வைக்கப்படும் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அல்லது நாமக்கல்லில் உள்ள வெடிமருந்து கிடங்கில் இந்த அமோனியம்
நைட்ரேட்டை சேமித்து வைக்கலாமா அல்லது ராணுவ வெடிமருந்துகள் வைக்கப்படும்
கிடங்கில் வைக்கலாமா என்பது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் ஆலோசித்து
வருகின்றனர்.
மணலியில் கன்டெய்னர் வைக்கப்பட்டுள்ள இடத்தைச்
சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அமோனியம் நைட்ரேட்டை
வாங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.