ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு
By: Karunakaran Fri, 28 Aug 2020 10:03:11 AM
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த கனமழை பெய்தது. இதனால் பர்வான், வார்டக் மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவு என்பதால் மக்கள் வெள்ளம் வருவதை அறியவில்லை. வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இதன் காரணமாக வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் பலர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். வெள்ளம் சேறும் சகதியுமான நீரை கொண்டுவந்ததால் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். 1,500-க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதுகுறித்து தகவலறிந்த தேசிய மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து வெள்ளத்தில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி 70 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. தற்போது வெள்ளம் காரணமாக மண்ணுக்குள் புதைந்தவர்களில் பலரின் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பலி எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
200-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளம் காரணமாக பலர் மண்ணுக்குள் புதைந்து இருப்பதால் அவர்களை மீட்கும் பணிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.