தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முககவசம் வழங்கவேண்டும் - கல்வித்துறை
By: Monisha Wed, 03 June 2020 09:37:33 AM
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூன் 15ம் தேதி முதல் தேர்வுகளை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கல்வித்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்வித்துறை சார்பில் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
* பள்ளிகளில் உள்ள அனைத்து அறைகளையும், வளாகத்தினையும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
* விடைத்தாளுடன் முகப்பு சீட்டினை தைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் சிறப்பு உறைகளை அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
* மாணவர்களின் நுழைவுச்சீட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய நுழைவுச்சீட்டினையே பயன்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளதாலும், நுழைவுச்சீட்டில் முதன்மை தேர்வு மையத்தின் பெயரும், தங்கள் பள்ளிகளின் பெயரும் இடம்பெற்று இருக்கும் என்பதாலும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் பள்ளிகளின் விவரத்தினை முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும்.
* வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு சென்ற மாணவர்கள் தேர்வு எழுத இருக்கும் பள்ளி மாவட்டத்துக்கு திரும்பிவிட்டார்களா? என்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.
* மாணவர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும்போது, முககவசம் வழங்கவேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 3 முகக்கவசமும், அதேபோல் தேர்வு எழுத உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஒரு முககவசமும் வழங்கவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.