கூட்டணி அரசாங்கத்தை கலைப்பதே பட்னாவிசின் ஒரே நிகழ்ச்சி நிரல் - சஞ்சய் ராவத்
By: Monisha Mon, 25 May 2020 11:08:57 AM
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள வாராந்திர கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி வாரணாசியில் 4 துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி மனிதநேயத்தை நமக்கு காட்டியிருந்தார். கடந்த 3 மாதங்களில் அந்த மனிதநேயம் மறைந்து விட்டதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் அந்த மனித நேயத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் மற்றும் சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்வது போன்ற பிரச்சினைகள் அடிக்கடி அரசியல் மயமாக்கப்படுகின்றன. இன்று சுமார் 6 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதேபோல வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டது என எதிர்க்கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் அரசாங்கங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரதமருக்கு எழுதும் கடிதங்களால் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கிளர்ந்தெழுந்து வருகிறார். அவரை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை தடுத்தது யார்?
சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தை கவர்னரின் உதவியுடன் கலைப்பதே பட்னாவிசின் ஒரே நிகழ்ச்சி நிரல். இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.