சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் போலி தகவல்
By: Karunakaran Fri, 10 July 2020 11:20:23 AM
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு நடத்த முடியாமல் போனது. மேலும் மீண்டும் தேர்வு தேதியை அறிவித்து, தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்தது. கொரோனா தாக்கம் அதிகமானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அதன்பின், மாணவர்களுக்கு மதிப்பெண் எந்த வகையில் கணக்கிடப்படும் என சமீபத்தில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. மாணவர்களுக்கு மதிப்பெண் பணிகளில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று சமூக வலைதளங்களில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகின.
10-ம் வகுப்புக்கு வருகிற 13-ந்தேதியும், 12-ம் வகுப்புக்கு வருகிற 11-ந்தேதியும் தேர்வு முடிவு வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவின. இந்த செய்தி வெளியான உடனே சற்று நேரத்தில் சி.பி.எஸ்.இ. தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் இந்த தகவலை பதிவிட்டு, இது போலியானது என தெரிவித்தது.
மற்றொரு கல்வி வாரியமான இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த கல்வி வாரியத்தின் கீழ் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.