கார் சாகுபடியை கைவிட்ட நிலையில் பிசான நெல் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
By: Nagaraj Sun, 20 Sept 2020 4:00:58 PM
விவசாயிகள் மும்முரம்... கார் சாகுபடியை கைவிட்ட நிலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் பிசான நெல் சாகுபடி பணியை முன்கூட்டியே தொடங்கியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கியது. இருப்பினும் ஜூன், ஜூலை மாதங்களில் போதிய மழை பெய்யவில்லை. அணைகள், குளங்களில் நீர்மட்டம் போதிய அளவு இல்லாததால் கார் சாகுபடி பணிகளை விவசாயிகள் கைவிட்டனர்.
அடவிநயினார், கருப்பாநதி, கடனாநதி, ராமநதி அணைப் பாசன நிலங்களில் பெரும்பாலான விவசாயிகள் கார் சாகுபடி பணியை கைவிட்டனர். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடர் மழை பெய்ததால் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. குளங்களுக்கும் நீர்வரத்து கிடைத்தது.
கார் சாகுபடிதான் ஏமாற்றத்தை அளித்து விட்டது என்பதால் தற்போது பிசான
சாகுபடியை முன்கூட்டியே தொடங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். மேற்கு
தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மேலகரம், நன்னகரம், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் குளங்களில் தண்ணீர் இருப்பதால், பிசான சாகுபடி கைகொடுக்கும் என
நம்புகின்றனர்.
இதேபோல், அடவிநயினார், கருப்பாநதி உள்ளிட்ட அணைப்
பாசனங்களில் உள்ள விவசாய நிலங்களிலும் நாற்றங்கால் தயார் செய்யும் பணியில்
விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விதைப்பு பணி சில நாட்களில்
விறுவிறுப்படையும் என்பதால், விதைநெல் வாங்கி வியாபாரிகள் இருப்பு
வைத்துள்ளனர்.