20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு - அண்ணா பல்கலைக்கழகம்
By: Monisha Sat, 06 June 2020 10:33:19 AM
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் படித்து, 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்களுக்காக இரண்டு சிறப்புத் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்புத் தேர்வு வழக்கமான பருவத் தேர்வோடு நடத்தப்பட்டது. ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறவிருந்த மற்றொரு தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறப்பு தேர்வு குறித்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா தாக்கம் குறைந்ததும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் திறக்கப்படும். அப்போது வழக்கமாக நடைபெறும் பருவத் தேர்வுடன் சிறப்புத் தேர்வு நடக்க உள்ளது. சிறப்புத் தேர்வை எழுத இருப்பவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் www.coe1annauniv.edu என்ற இணையதளத்திற்கு சென்று விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
இதற்கு முன்பு சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை. தேர்வு நடைபெறும் தேதி விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.