பஞ்சு குடோனில் தீ விபத்து; ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
By: Monisha Thu, 10 Dec 2020 4:08:21 PM
கரூர் காந்திகிராமம் அருகே உள்ள சாய்பாபாநகரை சேர்ந்தவர் நடராஜன். இவர் அப்பகுதியில் சொந்தமாக பஞ்சு குடோன் நடத்தி வருகிறார். இவரது பஞ்சு குடோனில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கொழுந்துவிட்டு எரிந்து புகைமண்டலமாக காட்சியளித்தது.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் பஞ்சு குடோனில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இருப்பினும் குடோனில் இருந்த பஞ்சு மூட்டைகள், பஞ்சு உற்பத்தி எந்திரம் போன்றவை தீயில் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேத மதிப்பு ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.