டெல்லியில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மருத்துவ உபகரணங்கள் நாசம்
By: Karunakaran Thu, 09 July 2020 12:30:55 PM
மேற்கு டெல்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் குடோன் ஒன்றில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் குடோனின் ஒரு பகுதியில் மட்டுமே பற்றிய தீ, அதன்பின் மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் சூழ்ந்தது.
பின்னர் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பின் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். 35 வாகனங்களில் வந்திருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இருப்பினும் தீ வேகமாக பரவியதால், குடோனில் இருந்த எலக்ட்ரானிக் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் ஏராளமாக இருப்புகள் எரிந்து நாசமாகின. மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமாகின.
இந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரவி வரும் நிலையில், மருத்துவ உபகரணங்கள் ஏராளம் நாசமாகியது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.