முதலில் 2 மதிப்பெண் மறு மதிப்பீட்டில் 100 மதிப்பெண்
By: Nagaraj Sat, 08 Aug 2020 4:11:35 PM
முதலில் 2 மறு மதிப்பீட்டில் 100 மதிப்பெண்... பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கணிதப் பாடத்தில் 2 மதிப்பெண் பெற்ற சிறப்பு மாற்றுத் திறனாளி மாணவி, மறுமதிப்பீட்டில் 100 மதிப்பெண் பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 10-ம் தேதி வெளியானது. இதில் ஹிசாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பார்வைக் குறைபாடுள்ள மாணவி சுப்ரியா, கணிதப் பாடத்தில் 2 மதிப்பெண் பெற்றிருந்தார். இது மாணவியையும், அவரது பெற்றோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எங்கோ தவறு நடந்திருக்க வேண்டும் என்று எண்ணிய மாணவியின் தந்தை, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தார். இதையடுத்து சுப்ரியாவின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் தற்போது அவருக்கு 100 மதிப்பெண் கிடைத்துள்ளது. இதுகுறித்து பேசிய மாணவி சுப்ரியா, 'கணிதத்தில் 2 மதிப்பெண் பெற்றதால் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன். எனது தந்தை மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பத்ததின் மூலம் தற்போது 100 மதிப்பெண் கிடைத்துள்ளது.
என் போன்ற மாற்றுத் திறனாளி மாணவர்களின் வாழ்வில் இது போன்ற தவறுகள்
இனிமேல் நடைபெறாமல் இருக்க கல்வி வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'
என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது மகள் கணிதம் தவிர மற்ற அனைத்து
பாடங்களிலும் 90க்கு மேல் மதிப்பெண் எடுத்திருந்ததால், உடனடியாக
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்ததாக மாணவியின் தந்தை ஷாஜ்ஜுராம்
தெரிவித்துள்ளார். இவர் ஒரு கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளிகள்
திறக்கப்பட்டவுடன் மாணவி சுப்ரியா கவுரவப்படுத்தப்படுவார் என்று தலைமை
ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஹரியானா பள்ளிக் கல்வி வாரியத்தின் அலட்சிய செயல்பாட்டுக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.