முதல்-மந்திரிகள் மக்களின் எதிர்காலத்தை பிரதமருக்காக அடகு வைகிறார்கள் - ராகுல்காந்தி
By: Karunakaran Tue, 13 Oct 2020 11:30:10 PM
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கான இழப்பீட்டை மத்திய அரசு இன்னும் முழுமையாக வழங்கவில்லை. கொரோனா காரணமாக, நிதி இல்லாததால், ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு 2 கடன் திட்டங்களை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதனை பா.ஜனதா ஆளும் மாநிலங்களும், பா.ஜனதாவுக்கு ஆதரவான கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஜி.எஸ்.டி. வருவாயை மாநிலங்களுக்கு அளிப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தது. பிரதமராலும், கொரோனாவாலும் பொருளாதாரம் உருக்குலைந்தது. பிரதமர், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் கோடி வரிக்குறைப்பு செய்தார். தனக்காக ரூ.8 ஆயிரத்து 400 கோடிக்கு 2 விமானங்கள் வாங்கினார். மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க பணம் இல்லை என்று மத்திய அரசு கூறியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கடன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று மாநிலங்களிடம் நிதி மந்திரி கூறினார்.இதை ஏற்றுக்கொண்ட மாநிலங்களின் மக்களை நான் கேட்கிறேன். பிரதமர் மோடிக்காக உங்கள் எதிர்காலத்தை உங்கள் முதல்-மந்திரி ஏன் அடகு வைக்கிறார்? என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில், ஹத்ராஸ் இளம்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்கும் ‘பெண்கள் பாதுகாப்புக்காக பேசுங்கள்’ என்ற ‘டுவிட்டர்’ பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று தொடங்கியது.
அதில் ராகுல் காந்தி, ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக நான் சென்றபோது, உத்தரபிரதேச மாநில அரசு தடுத்தது. அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. நான் அவர்களை சந்தித்ததில் இருந்தே அவர்களை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதும்தான் மாநில அரசின் வேலை. ஆனால், அந்த வேலையை செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி போடுகிறது. இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம் என்று கூறினார்.