கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்
By: Nagaraj Sat, 24 June 2023 11:47:36 AM
ராமநாதபுரம்: மண்டபம் பகுதி கோவில்வாடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 60 நாள் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர்.
ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால் கடந்த வாரம் இலங்கை கடற்படையினரின் மிரட்டல் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் பாதி வழியில் கரைக்கு திரும்பினர்.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ஜெகதாப்பட்டினம், மண்டபம் பகுதியில் இருந்து 22 மீனவர்கள் மற்றும் 4 படகுகளை சிறைபிடித்தனர்.
அவர்கள் இலங்கை காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மண்டபம் பகுதி கோவில்வாடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மண்டபம் இறங்கு தளத்தில் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.