புதுச்சேரியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கைது
By: Nagaraj Sat, 13 June 2020 7:34:52 PM
500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது... மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்காததை கண்டித்து ஆளுநர் மாளிகை மற்றும் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மீனவர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் 18மீனவ கிராமங்களை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 50 ஆயிரம் நபர்கள் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இதனிடையே மீன்பிடி தடைக்காலம் முடிந்த பின்னர் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதனிடையே மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீன்பிடி தடைக்கால நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கக்கோரி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் வம்பாகீரபாளையம் பகுதியில் இருந்து ஆளுநர் மாளிகை மற்றும் சட்டசபை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது பாரதி பூங்கா அருகே தடுப்புகளை அமைத்து முற்றுகையிட வந்தவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து போலீசாரின் தடுப்புகளை மீறி முற்றுகையிட முயன்ற அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் உட்பட அனைத்து மீனவர்களையும் போலீசார் கைது செய்தனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு வார காலத்திற்குள் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை அரசு வழங்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
பென்ஷன் வாங்கும் மீனவர்களுக்கு வழங்கப்படும், தடைக்கால நிவாரணத்தை ரத்து செய்யக்கூடாது என முற்றுகையில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.