ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் வருகிற நவம்பர் 26க்குள் கரை திரும்புக
By: vaithegi Wed, 22 Nov 2023 4:07:03 PM
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகிற 26-ம் தேதி அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. நவம்பர் 26-ல் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வருகிற 27ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்று தெரிவித்தார்.
இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் நவம்பர் 26க்குள் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதற்கு இடையே, தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் திருப்பூரில் 17 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. தமிழகத்தில் 15 இடங்களில் கனமழையும், 5 இடங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மேலும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.