மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிவு... காசிமேடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயார்
By: Nagaraj Tue, 13 June 2023 11:34:53 PM
சென்னை: மீன்பிடி தடைக்காலம் நாளை (புதன்கிழமை) நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதனால் காசிமேடு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தின் வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களாக மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
மீன் வளத்தை அதிகரிப்பதற்காக இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிப்பது பொதுவாக தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் இம்மாதம் 14-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இந்த தடை நாளை (புதன்கிழமை) நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதனால் காசிமேடு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்காக விசைப்படகுகளில் ஐஸ் ஏற்றுதல், வலைகளை சரி செய்தல், டீசல் நிரப்புதல், உதிரி பாகங்கள் பழுது நீக்குதல், உணவு, குடிநீர் நிரப்புதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வழக்கத்தை விட பரபரப்பாக காணப்படுகிறது.