சுதந்திர தினத்தையொட்டி, சென்னை துறைமுகம் முதல் பெசண்ட் நகர் வரை மீன்பிடிக்கத் தடை
By: vaithegi Sun, 13 Aug 2023 10:04:12 AM
சென்னை: இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள்கொண்டாடப்படவுள்ளது. சென்னை கடற்கரை சாலையில் நடைபெறும் சுதந்திரதின விழா கொண்டாட்டதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார்.
எனவே இதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை கடற்கரை பகுதியில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இது தொடர்பாக அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,
“பாதுகாப்பு காரணங்கள் கருதி, வருகிற ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று காலை 4 மணி முதல் 10 மணி வரை சென்னை துறைமுகம் முதல் பெசண்ட் நகர் வரை கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.