- வீடு›
- செய்திகள்›
- அசாம் முதல்மந்திரியின் பெயரில் போலியாக கையெழுத்திட்டு லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய 5 பேர் கைது
அசாம் முதல்மந்திரியின் பெயரில் போலியாக கையெழுத்திட்டு லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய 5 பேர் கைது
By: Karunakaran Tue, 01 Sept 2020 09:32:46 AM
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநில முதல்மந்திரிகளின் சார்பில் தனியாக வங்கிக்கணக்கு உள்ளது. பேரிடர் போன்ற காலங்களில் விருப்பத்தின் பெயரில் பொதுமக்கள் தங்களால் இயன்ற நிவாரண நிதி உதவிகளை நன்கொடையாக மாநில அரசுக்கு வழங்க இந்த வங்கி கணக்குகள் பயன்படுகின்றன. இது முதல்மந்திரி நிவாரண நிதி கணக்கு எனப்படும். இதில் எப்போதும் ஏராளமான பணம் இருப்பில் இருக்கும். இந்த வங்கி கணக்கிற்கு யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.
இருப்பினும், இந்த கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முதல் மந்திரியின் கையெழுத்து அவசியம். இந்நிலையில், அசாம் மாநில முதல்மந்திரி சோனாவாலின் நிவாரண நிதி வங்கி கணக்கில் இருந்து கடந்த 10 ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமான வகையில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்மந்திரியின் சிறப்பு விசாரணை பிரிவில் இருந்து காவல்துறை எஸ்.பி.க்கு புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அசாம் போலீசார் உத்தரபிரதேச மாநில கோரக்பூர் பகுதியில் வசித்து வந்த சர்வேஷ் ராவ், ரவீந்திர குமார், முகமது ஆரிப், முகமது ஆசிப், சல்ஜி ஆகிய 5 பேரை கைது
செய்தனர். முதல்கட்ட விசாரணையில் காசோசலையில் அசாம் முதல்மந்திரியின் கையெழுத்தை போலியாக இட்டு முதல்மந்திரியின் நிவாரண நிதி கணக்கில் இருந்து 3 லட்சத்து 30 ஆயிரம் வரை பணத்தை எடுத்துள்ளதை ஒப்புக்கொண்டனர்.
மேலும், இதேபோல் பல்வேறு மாநில முதல்மந்திரிகளின் நிவாரண நிதிக்கணக்குகளில் இருந்து பல முறை லட்சக்கணக்கில் பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரையும் விசாரணைக்காக அசாம் மாநிலத்திற்கு கொண்டுவந்துள்ளனர். முதல்மந்திரிகளின் நிவாரண நிதியில் இருந்தே பணம் சுருட்டப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.