- வீடு›
- செய்திகள்›
- வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
By: Monisha Sat, 13 June 2020 1:17:31 PM
தமிழ்நாட்டில் நிலவும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 5-ம் கட்ட ஊரடங்குக் காலம் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மே 8-ந்தேதி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 பேர். ஜூன் 8-ந்தேதி இந்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது ஒரே மாதத்தில் மட்டும், சுமார் 27 ஆயிரம் பேருக்கு கூடுதலாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு என்பது முறையாக, ஒழுங்காக அமல்படுத்தப்படவில்லை.
ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்தால், பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் ஊரடங்கைத் தளர்த்தியது அரசு. ஆனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கி இருந்தால் ஊரடங்குத் தளர்வுகள் தேவையிருந்திருக்காது. ஊரடங்குத் தளர்வுகள்தான், இன்றைக்கு கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் 2-வது இடத்துக்குச் சென்றுள்ளது.
தமிழகத்தில் 30 ஆயிரத்தைக் கடந்திருக்கும் தொற்று, 2 லட்சம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அனைத்து தேவைகளையும் வழங்கி மக்களை வீட்டுக்குள் தனிமைப்படுத்தி இருக்க வைப்பது அரசின் கடமை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்க வேண்டும். சென்னை மிகமிக மோசமான பேராபத்தைச் சந்தித்துக் கொண்டுள்ளது. ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமன்றி, அடுத்தடுத்து தேவையான மருத்துவக் கட்டமைப்பை திட்டமிட்டு, கொரோனாவை தடுப்பதே அரசின் கடமை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.