தென்மேற்குப் பருவமழை காரணமாக கோதையாற்றில் தீடீர் வெள்ளப் பெருக்கு
By: Monisha Mon, 08 June 2020 11:55:19 AM
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று குளச்சலில் 76 மி.மீ. மழை பதிவாகியது. இரணியல் 44மி.மீ., கோழிப்போர்விளை 20மி.மீ., குருந்தன்கோடு 24மி.மீ., முள்ளங்கினாவிளையில் 33மி.மீ. மழை பதிவானது.
மழையின் காரணமாக கோதையாற்றில் தீடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் கோதையாறு, குழித்துறை தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38.80 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 48.60 அடியை எட்டியுள்ளது. சிற்றாறு ஒன்றில் 14.59 அடி, சிற்றாறு இரண்டில் 14.69 அடி தண்ணீர் உள்ளது.
முதல்வர் அறிவித்தபடி கன்னிப்பூ சாகுபடிக்காக இன்று காலை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.