Advertisement

தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்வு

By: Monisha Fri, 13 Nov 2020 3:12:56 PM

தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்வு

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு பூக்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.

தினமும் அதிகாலையிலேயே பூக்கள் கொண்டு வரப்படுவதால் அதை வாங்கி செல்ல ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் கூடுவார்கள். பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக பண்டிகை நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து இருக்கும்.

diwali festival,market,flowers,prices ,தீபாவளி பண்டிகை,மார்க்கெட்,பூக்கள்,விலை

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நேற்று தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.500-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.500 உயர்ந்து ரூ.1000-க்கு விற்பனையானது. இதுபோல் முல்லை ரூ.500-ல் இருந்து ரூ.1000 -ஆகவும், கனகாம்பரம் ரூ.750-ல் இருந்து ரூ.1000-ஆகவும் ரூ. 80-க்கு விற்பனையான அரளிப்பூ கழனி ரூ.170 ஆகவும் உயர்ந்தது.

தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:- மல்லிகை ரூ.800, வாடாமல்லி ரூ.70, சிவப்பு கேந்தி ரூ.120, சம்பங்கி ரூ.150, ரோஜா (100 எண்ணம்) ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.270, துளசி ரூ.40, தாமரை (100 எண்ணம்) ரூ. 500, பச்சை ரூ.8, கோழிப்பூ ரூ.70, கொழுந்து ரூ.120, மருக்கொழுந்து ரூ.150, மஞ்சள் கேந்தி ரூ.85, மஞ்சள் சிவந்தி ரூ.250, வெள்ளை சிவந்தி ரூ.250, ஸ்டெம்புரோஸ் (1கட்டு) ரூ.200 என விற்பனையானது.

Tags :
|