ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சற்று உயர்ந்துள்ளது
By: vaithegi Sun, 31 July 2022 10:10:56 AM
பென்னாகரம்: கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்றிரவு காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சற்று உயர்ந்துள்ளது.
இதை அடுத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 22-வது நாளாக தடை விதித்துள்ளது.
இதனை தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் மிக தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.