கொரோனா வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Tue, 23 June 2020 2:45:25 PM
சீனாவின் உகானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. 2020-ம் ஆண்டின் பாதி காலம் முடிந்தும் இன்னும் கொரோனா குறைந்தபாடில்லை. கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகின்றனர்.
கொரோனா வைரஸுக்கு தற்போது வரை தடுப்பூசியோ, மருந்துகளோ இல்லாததால் வல்லரசு நாடுகள் கூட தத்தளித்து வருகின்றன. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா தாக்கம் கடுமையாக உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கொரோனாவின் பிடியில் உலக அளவில் அதிகமானோர் சிக்கிய மோசமான நாளாக நேற்று முன்தினம் மாறியுள்ளது.
நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் உலக அளவில் 1 லட்சத்துக்கு 83 ஆயிரத்து 20 பேர் இந்த கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் இவ்வளவு அதிகம்பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும். இதில் 54,771 பேர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர்கள், அடுத்ததாக 36,617 அமெரிக்கர்களும், 15,400 இந்தியர்களும் இதில் அடங்குவர்.
பிரேசில், அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா கொடூரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து ஓய்ந்திருந்த சீனா, தென்கொரியா மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங் நகரம் மீண்டும் கொரோனாவின் மையமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் சோதனைகள் அதிகரித்து வருவதால், கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.