சீனாவில் இனிமேல் வெளிநாட்டு கட்டட மாடல்களுக்கு தடை விதிப்பு
By: Nagaraj Sat, 09 May 2020 09:19:15 AM
இனிமேல் வெளிநாட்டு கட்டட மாடல்களை கூடவே கூடாது என்று சீனா தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீனாவில் ஈபிள் டவர், இத்தாலிய கிராமங்கள், தேம்ஸ் நகரம் போன்ற பல வெளிநாட்டு கட்டட மாடல்களை காணலாம். ஆனால் அதை தற்சமயம் சீனா தடை செய்துள்ளது. வெளிநாட்டு கட்டடங்களை அச்சு அசலாக கட்டமைப்பதை சீன அரசு தடை செய்துள்ளது.
இதுகுறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
கட்டடங்கள் ஒவ்வொரு நகரின் கலாசாரத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒன்று எனவே வெளிநாட்டு மாதிரிகளை குறைக்கப்பட வேண்டும். வானளாவிய கட்டடங்களும் 500 மீட்டருக்குள் இருக்க வேண்டும் என புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ஏப்ரல் 27ம் தேதியே வெளியிடப்பட்ட போதிலும் இப்போதுதான் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரங்கங்கள், கண்காட்சி மையங்கள், அருங்காட்சியகம், திரையரங்கங்கள் போன்ற பொது இடங்கள் வெளிநாட்டு கட்டட அமைப்பின் சாயலில் இருக்கக் கூடாது.
"இந்த முடிவு, கட்டடங்களில் சீன கலாசாரத்தை பிரதிபலிக்கவும், நகரின் சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தவும் எடுக்கப்பட்டது".இது சமூக வலைதளங்களில் பெரிதும் வரவேற்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.