வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைய கூடாது - கோத்தபய ராஜபக்சே எச்சரிக்கை
By: Karunakaran Fri, 21 Aug 2020 6:55:11 PM
இந்திய மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு சிறைக்கு செல்வதும், கொல்லப்படுவதும் நடந்து வருகிறது. குறிப்பாக தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்ததாக இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கியும், படகுகளை தாக்கியும் மீனவர்கள் கைது செய்வது அடிக்கடி நடக்கிறது.
இந்திய- இலங்கை கடல் எல்லை விவகாரம் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதனால் தமிழக மீனவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் தொழில் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை விதித்து, உள்நாட்டு மீன்களை சந்தைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், உரிய அனுமதி இல்லாமல் இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.