இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி கொரோனா பாதிப்பில் இருந்து குணம்
By: Karunakaran Tue, 15 Sept 2020 2:50:57 PM
இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனிக்கு தற்போது 83 வயதாகிறது.இவர் பெரும் வர்த்தகர் ஆவார். கோடீசுவரரான இவர் அரசியலில் புகுந்து, 1994-ம் ஆண்டில் இத்தாலியின் பிரதமரானார். அதன்பின், தொடர்ந்து 4 முறை அந்நாட்டின் பிரதமராக பெர்லஸ் கோனி செயல்பட்டுள்ளார். தற்போது தேசிய அளவிலான தனது பங்கை குறைத்துக்கொண்டு உள்ளூர் அரசியலில் தனது கட்சியினருக்கு ஆதரவளித்து வருகிறார்.
இந்நிலையில் பெர்லஸ் கோனிக்கு கடந்த 3-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சர்டினியா தீவுகளுக்கு சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்ததாகவும், அங்குதான் தனக்கு கொரோனா பரவியிருக்கலாம் என பெர்லஸ் தெரிவித்திருந்தார். அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெர்லசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பெர்லஸ் கொரோனா வைரஸ் பாதிப்பால் மிகவும் ஆபத்தான வயது நிலையை கொண்டவர் பட்டியலில் இருந்தார். இந்நிலையில், 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெர்லஸ் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி இதுகுறித்து கூறுகையில், மிகவும் ஆபத்தான சவாலில் தப்பித்துள்ளேன் என்று கூறினார். 83 வயதிலும் அவர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.