முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார்
By: Karunakaran Tue, 25 Aug 2020 1:13:32 PM
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 10-ம் தேதி வீட்டு குளியலறையில் தவறி விழுந்து மயக்கமடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் கட்டி இருப்பதும், கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்தது. பின்னர் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதன்பின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் சில நாட்களுக்கு பிறகு கோமா நிலைக்கு சென்றார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வந்தது.
அண்மையில் அவரது உடல்நிலையில் அவ்வப்போது சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறினர். தற்போது அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தற்போது ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.