முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தகவல்
By: Karunakaran Sat, 22 Aug 2020 3:09:05 PM
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 10 ஆம் தேதி குளியலறையில் விழுந்து விட்டதால் மயக்கமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் கட்டி இருந்ததும், கொரோனா பாதிப்பு இருந்ததும் தெரியவந்தது. இதனால் அவருக்கு உடனே மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மூளையில் உறைந்த ரத்த கட்டியை அகற்ற டெல்லியில் உள்ள ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் நடந்தது.அறுவை சிகிச்சைக்கு பின், அவர் கோமா நிலைக்கு சென்றதால் வென்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வென்டிலேட்டர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்து டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பும் உள்ளதால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.