முன்னாள் பிரதமர் தேவகவுடா ராஜ்யசபா தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தார்
By: Nagaraj Wed, 10 June 2020 09:42:56 AM
ராஜ்யசபா தேர்தலுக்கு மனு தாக்கல்... முன்னாள் பிரதமர் தேவகவுடா ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இது குறித்து அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பல தேசிய தலைவர்கள் மற்றும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் தனது முடிவை எடுத்தார். அனைவரின் ஒருமித்த கருத்தை ஒப்புக் கொண்டதற்கு தேவேகவுடாவுக்கு நன்றி," என பதிவிட்டு உள்ளார். கர்நாடக மாநிலத்தில் நான்கு ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன.
இதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்வது நேற்று கடைசி நாளாகும். ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு எம்.பிக்கு 44 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தேவை. இதன் படி 68 இடங்களை கொண்ட காங்கிரஸ் கட்சி மல்லிகார்ஜூன கார்கேவை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
இந்நிலையில் 34 இடங்களை மட்டுமே வென்றுள்ள ஜனதா தள (எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமரும் ஜனதா தள (எஸ்) கட்சியின் தலைவருமான தேவகவுடா வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆளும் பா.ஜ., கட்சிக்கு 117 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால் அக்கட்சியால் எளிதாக இரண்டு இடங்களில் வெற்றிபெற்று விடமுடியும்.
87 வயதாகும் தேவகவுடா ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றால் இரண்டாவது முறையாக பார்லி.,செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த 1996 ல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு முதன்முறையாக பார்லி.,சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.