சரக்கு ரயில் ஏறி தண்டவாளத்தில் தூங்கிய 14 தொழிலாளர் பலி
By: Nagaraj Fri, 08 May 2020 12:55:58 PM
தண்டவாளத்தில் தூங்கிய தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 14 பேர் பலியாகி உள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 14 பேர் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கி கொண்டனர். அவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்ட போதும், பலர் விரைவாக சொந்த ஊர் செல்ல வேண்டும் என்பதற்காக நடந்தே செல்கின்றனர்.
அந்த வகையில், ம.பி.,யை சேர்ந்த தொழிலாளர்கள், ரயில் தண்டவாளத்தை ஒட்டி , மஹாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்றனர்.
இரவு நேரத்தில் அவர்கள் தண்டவாளத்திலேயே படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 5: 15 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று அவர்கள் மீது ஏறியது. இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த ரயில்வே மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரதமர் அஞ்சலி
மஹாராஷ்டிரா விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:
மஹாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசியுள்ளேன். அவர், சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.