நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
By: Karunakaran Thu, 09 July 2020 10:55:00 AM
கடந்த மாதம் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, நாடு முழுவதும் ஏழைகளுக்கு நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும் என்று கூறினார். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நவம்பர் மாதம்வரை, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் இலவசமாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 81 கோடி ஏழைகள் பலன் அடைவார்கள எனவும், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆகஸ்டு மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது இல்லை. பிரிவினைக்கு பின்னர் இத்தகைய திட்டம் அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறை என்று கூறினார். மேலும், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் சலுகை, செப்டம்பர் மாதம்வரை நீட்டிக்க மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகர்ப்புற புலம்பெயர்ந்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் மலிவான வாடகை குடியிருப்புகள் உருவாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ், பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் 12 சதவீத பங்களிப்புத்தொகையை மத்திய அரசே செலுத்தும் சலுகையை ஆகஸ்டு மாத சம்பளம்வரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.