4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு
By: Monisha Mon, 15 June 2020 4:10:48 PM
இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 31 ஆயிரத்து 896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருகிறது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழுவினர் பேட்டியளித்த போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளை கடுமையாக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம்போல் இயங்கும். மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் 2 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.