சென்னை உட்பட பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
By: Nagaraj Mon, 25 Sept 2023 11:23:55 AM
சென்னை: விநாயகர் சிலைகள் விசர்ஜனம்... தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி நிறுவப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
சென்னையில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடற்கரைகளில் கரைக்கப்பட்ட நிலையில், சுமார் 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காசிமேடு கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதை காண ஏராளமானோர் குவிந்தனர்.
பட்டினப்பாக்கம் கடற்கரையிலும் கிரேன்களின் உதவியுடன் ஏராளமான சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. சென்னை பாலவாக்கம் கடற்கரையில் இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் விஜர்சன நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டு சிலைகளை கரைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பாமணி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. கொடைக்கானலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.