ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த கும்பல் கைது
By: Karunakaran Thu, 08 Oct 2020 4:30:51 PM
உத்தரபிரதேசம் ஹத்ராசில் தலித் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய இந்நிலையில், இதே போன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்திலும் தற்போது நடந்துள்ளது. ராஜஸ்தானின் பார்மெர் மாவட்டத்தில் உள்ள சிவ்கேத்ரா கிராமத்தை சேர்ந்த விவசாயியின் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்தாள். அந்த ஊரில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.
இதற்கு ஓட்டு அளிப்பதற்காக அப்பெண்ணின் பெற்றோர்கள் வெளியே சென்று இருந்தனர். அப்போது வாலிபர்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை இழுத்து சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வைத்து அவரை காட்டு பகுதிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு வைத்து அவரை கற்பழித்தனர். மேலும் செல்போன் மூலம் வீடியோ படமும் எடுத்தார்கள். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
தேர்தலில் ஓட்டு அளித்து விட்டு வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் மகளை காணாததை கண்டு தவித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அவரை தேடிய போது காட்டில் மயங்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை கற்பழித்தவர்கள் யார் என்று தெரியாது என அவர் கூறினார்.
இருப்பினும் போலீசார் துப்பு துலக்கி குற்றவாளிகளை கண்டுபிடித்து விட்டனர். 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்