கொள்முதல் முழுமையாக செய்யாததால் முளைவிட்ட நெல்; விவசாயிகள் கவலை
By: Nagaraj Fri, 31 July 2020 10:33:38 PM
கொள்முதல் நிலையத்தில் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்யாததால் அவை தற்போதைய மழையால் மழையில் முளைத்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியாக உள்ள தா.பழூர் ஒன்றியத்தில் கோடாலிகருப்பூர் அண்ணகாரன்ப்பேட்டை, சோழமாதேவி, குறிச்சி, இடங்கண்ணி, வாழைக்குறிச்சி, கண்டியங்கொல்லை , கோடாலி, வடவாறு தலைப்பு, தென்கட்சிபெருமாள்நத்தம், கீழக்குடிகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக கோடாலிகருப்பூர் கிராமத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கொள்முதல் நிலையத்தில் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்யாத காரணத்தினால் விவசாயிகள் நெல்லை சாலைகள் மற்றும் திறந்தவெளியில் கொட்டி வைத்தனர்.
இந்த நெல்லை சாதாரண தார்பாய் போட்டு மூடி உள்ளதால் சாலையில் கால்நடைகள்
மற்றும் பன்றிகள் நெல்லை சாப்பிட்டு வருகின்றன. சாக்குகளும் பற்றாக்குறையாக
உள்ளதால் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து மூட்டையாக அடுக்கி
வைப்பதற்கு இடமும் இல்லை. இதனால், 15 நாள்களுக்கும் மேலாக நெல்கள்
சாலையிலேயே கொட்டி வைத்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக
அவ்வப்போது மழை பெய்து வருவதால் சாலையில் கொட்டி உள்ள நெல்கள்
மட்டுமல்லாமல் மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்களும் நனைந்து
தற்போது முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள்
கூறுகையில்,'' கடன் வாங்கி நெல் சாகுபடி செய்து விற்பனைக்கு கொண்டு
வந்தால் பாதுகாப்பான இடவசதியோ, தேவையான சாக்குகளோ இல்லாததால் நெல்லை
கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுக்கின்றனர்.
தற்போதைய மழையில் நெல்
நனைந்து முளைக்கும் நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை
எடுத்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய உரிய
உத்தரவை வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.