ஜனநாயகத்தைக் காக்க நாட்டு மக்கள் குரல் கொடுங்கள் - ராகுல் காந்தி
By: Karunakaran Mon, 27 July 2020 10:36:48 AM
ஜனநாயகத்தைக் காக்க நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடி வரும் சூழலில், பாஜகவோ அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்கும் செயலில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2018-ல் ராஜஸ்தான் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, சதி செய்து கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கியுள்ளதாகவும், மத்திய பிரதேசத்தில் செய்ததைப்போல், தற்போது ராஜஸ்தானிலும் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்ப்பதை பா.ஜ.க. நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு உரிமைகளை மதித்து உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என கோருகிறோம். எங்களுடன் இணைந்து ஜனநாயகத்துக்காக குரல் கொடுங்கள் என்று நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர், ஜனநாயகத்துக்காக பேசுங்கள் #SpeakUpForDemocracy என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ராஜஸ்தான் அரசியலில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.