வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும்; கமல் வலியுறுத்தல்
By: Nagaraj Thu, 09 July 2020 2:18:22 PM
வீட்டிற்கே சென்று பரிசோதிக்க வேண்டும்... 'கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும், தொற்றை தடுக்கவும், மக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்' என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனோ தொற்றின் அறிகுறிகள் இருக்கும் பலர், தங்களுக்கு தொற்று உள்ளதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமல், பதற்றத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதை, அரசு கவனிக்க வேண்டும்.
'தமிழகத்தில், 95 ஆய்வகங்களில், சராசரியாக ஒரு நாளைக்கு, 35 ஆயிரம்
நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது' என, அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
இருந்தாலும், மாநிலம் முழுதும் பரவியிருக்கும் நோய் கிருமியின் தாக்கத்தில்
இருந்து மக்களை காக்க, அரசு இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
கொரோனா
தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள், மருத்துவரின் அனுமதிச் சீட்டுக்காக
காத்திருக்காமல், நேரடியாக ஆய்வகங்களை பரிசோதனைக்காக அணுகலாம் என, அறிவிக்க
வேண்டும். அனைத்து ஆய்வகங்களிலும், பரிசோதனை உபகரணங்கள் இருப்பதை உறுதி
செய்ய வேண்டும். தொற்றில் முதலிடத்தில் இருந்த மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை
நகரில் இதுபோன்ற ஒரு நடவடிக்கை, நேற்று முன்தினம் முதல் செயல்பாட்டுக்கு
வந்துள்ளது.
மேலும், ஆய்வக ஊழியர்கள், தகுந்த பாதுகாப்பு
நடவடிக்கைகளுடன் வீட்டிற்கே சென்று, ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதனால்,
தொற்று பரவும் அபாயம் தவிர்க்கப்படும். டில்லியை போல், பரிசோதனைகளின்
விலையை இன்னும் குறைக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.