Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2.94 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2.94 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

By: Nagaraj Thu, 06 Oct 2022 11:21:09 AM

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2.94 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2.94 கோடி ரூபாய் மதிப்பிலான 5.6 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.94 கோடி ரூபாய் மதிப்பிலான 5.6 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை சிட்ரா பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம்.

அதேபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவ்வப்போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், துப்பாக்கிகள், தோட்டாக்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் என்ற விமானம் கோவைக்கு வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுபதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டார்.

coimbatore,airport,kidnapping,gold,excitement,bail ,கோவை, விமான நிலையம், கடத்தல், தங்கம், பரபரப்பு, ஜாமீன்

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 6 பயணிகளிடம் சோதனை மேற்கொண்ட போது, செயின்கள் மற்றும் வளையல்கள் வடிவில் தங்கத்தை தங்களது பைகளிலும், பேண்ட் பாக்கெட்டுகளிலும் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 2.94 கோடி ரூபாய் மதிப்பிலான 5.6 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தங்கத்தை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த முகமது அப்சல் (32) மற்றும் திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் என்ற இரண்டு பயணிகளை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த முகமது அப்சல் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் கிருஷ்ணனிடம் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 50 லட்ச ரூபாய் என்றாலும், ஒரு கோடிக்கும் குறைவாகவும் இருப்பதால் ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்பதால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
|