- வீடு›
- செய்திகள்›
- கேரள விமான விபத்து மீட்பு பணியில் ஈடுபடும் அனைவரும் தனிமைப்படுத்துதல் முகாமுக்கு செல்ல வேண்டுமென அரசு அறிவிப்பு
கேரள விமான விபத்து மீட்பு பணியில் ஈடுபடும் அனைவரும் தனிமைப்படுத்துதல் முகாமுக்கு செல்ல வேண்டுமென அரசு அறிவிப்பு
By: Karunakaran Sat, 08 Aug 2020 5:31:32 PM
கொரோனா ஊரடங்கினால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் மற்றும் 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தனர்.
துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியபோது, பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.இதனால் விமானம் தரையிறங்கியபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தற்போது கேரள சுகாதார மந்திரி கே.கே. சைலஜா பேட்டி அளித்தபோது, கோழிக்கோடு விமான நிலையத்தில் மீட்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் சுய தனிமைப்படுத்துதல் முகாமுக்கு செல்ல வேண்டும். அவர்கள் அனைவருக்கும் மாநில அரசு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயம் அடைந்தவர்களின் மருத்துவமனை செலவை அரசே ஏற்கும். என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.