மதியம் முதல் 7 மாவட்டங்களில் மீண்டும் அரசு பேருந்துகள் இயங்கும்
By: Monisha Thu, 26 Nov 2020 1:03:26 PM
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளும் செல்லும் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 24ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
மேலும் விழுப்புரம் வழியாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு செல்லும் அரசு பேருந்துகளும் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ் சேவையும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நிவர் புயல் கரையை கடந்த நிலையில் இன்று மதியம் முதல் 7 மாவட்டங்களில் மீண்டும் அரசு பேருந்துகள் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.