லிபியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரை நிறுத்துவதாக அரசு படையினர் அறிவிப்பு
By: Karunakaran Sun, 23 Aug 2020 3:47:36 PM
லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, 2011ம் ஆண்டு கொல்லப்பட்டார். இதற்கு பின், அங்கு உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. ஆட்சியை கைப்பற்ற பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கொல்லப்பட்ட கடாபியின் ஆதரவாளரான கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பயங்கர தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த மோதலில் பல்வேறு வெளிநாட்டு படையினரும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படையினர் என இருதரப்புக்கும் ஆதரவாக சண்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்துவதாக ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட திரிபோலியை தலைநகராக கொண்ட லிபிய அரசு தலைமை நேற்று அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு பின், கடாபியின் ஆதரவு கிளர்சியாளர் கலிபா கப்தார் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் குழுவும் தாங்களும் லிபியாவில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிப்பதாக தெரிவித்தது. எண்ணெய் வளம் மிக்க லிபியாவில் விரைவில் பொதுத்தேர்தலை நடத்த இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்துள்ளதால், உள்நாட்டுப்போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர முதல் முயற்சி என ஐ.நா. உள்பட பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளனர்.