2014 முதல் 2022-ம் ஆண்டு வரை ... 7.22 லட்சம் பேருக்கு அரசு பணி
By: vaithegi Thu, 28 July 2022 08:32:12 AM
புதுடெல்லி, மத்திய அரசு துறைகளில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் பணி நியமனம் பெற்றவர்களின் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார்.
அதன்படி அவர் கூறுகையில், 'கடந்த 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 22.05 கோடி விண்ணப்பதாரர்களிடம் இருந்து அரசு பணிக்கான மனுக்கள் பெறப்பட்டன. இதில் 7,22,311 பேருக்கு பல தரப்பட்ட துறைகளில் பணி நியமனத்துக்கான பரிந்துரைகளை ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் வழங்கின. அதன்படி அவர்களுக்கு பணி வழங்கப்பட்டு இருக்கிறது' என்று தெரிவித்தார்.
மேலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதும், மேம்படுத்துவதும் அரசின் முன்னுரிமையாக உள்ளதாக கூறிய ஜிதேந்திர சிங், அதன்படி, நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க அரசு பல்வேறு வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
அரசு செயல்படுத்தி வரும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தால் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் மந்திரி நம்பிக்கை வெளியிட்டார்.