முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்த இங்கிலாந்திடம் பாகிஸ்தான் அரசு கோரிக்கை
By: Karunakaran Mon, 24 Aug 2020 10:04:27 AM
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதி ஊழல் வழக்கு உள்ளது. இதனால் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. பின்னர் சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
அதன்பின், நவாஸ் ஷெரீப் லண்டனில் சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் கோர்ட்டு அவருக்கு 8 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது. பின்னர், நவம்பரில் நவாஸ் ஷெரீப் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். டிசம்பர் 23-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நவாஸ் ஷெரீப்புக்கு மேலும் 4 வாரம் ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.
மேலும், ஜாமீனை நீட்டிக்க வேண்டுமானால் நவாஸ் ஷெரீப்பின் மருத்துவ அறிக்கைகளை பஞ்சாப் மாகாண அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமென லாகூர் ஐகோர்ட்டு தெரிவித்தது. ஆனால் அவரது உடல்நிலை குறித்த மருத்துவ சான்றிதழை மட்டும் நவாஸ் ஷெரீப் தரப்பு தாக்கல் செய்ததை மருத்துவ வாரியம் மறுத்தது. இந்நிலையில் நவாஸ் ஷெரீப் லண்டன் வீதிகளில் சகஜமாக உலாவரும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான பிரதமரின் சிறப்பு ஆலோசகர் ஷாஜாத் அக்பர் கூறுகையில், பாகிஸ்தான் அரசு நவாஸ் ஷெரீப்பை ஒரு தலைமறைவு குற்றவாளியாக கருதுகிறது. எனவே அவரை ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசுக்கு முறைப்படி கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான இந்த நடவடிக்கையை தனிப்பட்ட தாக்குதலாக பார்க்கக்கூடாது. நவாஸ் ஷெரீப் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் லண்டன் வீதிகளில் உலா வருவது பாகிஸ்தான் நீதித்துறையின் முகத்தில் விழுந்த ஒரு அறை. அரசாங்கத்தால் இதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.