அரசு பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் முட்டைகள் வழங்க உத்தரவு
By: Monisha Fri, 04 Sept 2020 2:46:04 PM
அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் திறக்கவேண்டிய பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
பள்ளிகள் எப்போது திறக்கும் என்பதும் குறித்தும் அரசு தரப்பில் இன்னும் வெளியாகவில்லை. இதனால், தற்போது பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பள்ளி படிப்பை பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், சத்துணவுத் திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உலர் உணவுப் பொருட்களுடன் சேர்ந்து தற்போது செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.