தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி
By: Monisha Fri, 28 Aug 2020 09:48:31 AM
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் செயல்பட நூலகத்துறை அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க சில உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் அரசு நூலகங்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் மூடப்பட்டது. இந்நிலையில் அரசு நூலகத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.