ஹரியானாவில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவச திணை வழங்க அரசு முடிவு
By: vaithegi Wed, 25 Oct 2023 4:01:01 PM
ஹரியானா : 3 மாதங்களுக்கு இலவசம் ... ஹரியானா மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூடுதல் தானியங்கள் உட்பட இலவச ரேஷன் வழங்கப்பட இருக்கிறது. இந்த பலனை அவர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு பெற இருக்கின்றனர்.
மேலும் இதற்கான பொருள்களை அக். 31ம் தேதிக்குள் டிப்போவிற்கு கொண்டு வர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் 22 மாவட்டங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு இலவச தானியங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 442000 குவிண்டால் தினை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உணவு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அறிவித்துள்ளது. வருகிற நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், மாநிலத்தின் பிபிஎல் பிரிவைச் சேர்ந்த தகுதியுள்ள 41 லட்சத்து 71 ஆயிரத்து 314 ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு ரேஷன் டெப்போக்களில் இலவச தினை கிடைக்கும்.
அதே போன்று 35 கிலோ தானியங்களில் 17 கிலோ தினையும், 18 கிலோ கோதுமையும் AAY பிரிவின் தகுதியுள்ள குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.